Face Book LIKE

Monday, December 10, 2018

காணாத கோணத்தில் கவியின் வரவு !

காணாத கோணத்தில் கவியின் வரவு !
-----–----------------------------------------------
வெந்தழலும் தண்ணீரும்
தண்மனதின் வெண்சிறகை
விரித்துச்  சிரித்திடவும் .
சிரித்து மகிழ்ந்திடவும்,
சீரியதோர் செந்தமிழில்
  வரியெழுதும் கவியங்கே
  வந்து பிறக்கின்றான்  !
  வான்தொட்டு முழங்கி
  வார்த்தைக ளிசைக்கின்றான்  !

எங்கெங்கும் வண்ணமயம்
எண்ணங்கள் அன்புமயம்
ஏந்திவரும் சொற்களெல்லாம்
இசைகொண்ட நாதலயம் !

பண்ணும் பதமும் தன்
பாதையிலே ஜதிபோடப்
பேச்சற்ற மௌனங்கள்
பாடுகின்ற ராகலயம் !
   வரியெழுதும் கவியிங்கே
   வந்து பிறக்கின்றான் !
   வான்தொட்டு முழங்கி
   வார்த்தைக ளிசைக்கின்றான்  !

வான்மழையே தேன்துளியாய்
தெய்வீக இசை பொழிக !
வண்டினமே மகரந்தக்
கவிபாடிப் பறந்திடுக !
    வரியெழுதும் கவியிங்கே
    வந்து பிறக்கின்றான் !
    வான்தொட்டு முழங்கி
    வார்த்தைக ளிசைக்கின்றான்  !

--கி.பாலாஜி
03.05.2018
12.15 am

Monday, December 3, 2018

இரு கை ஓசை



இரு கை ஓசை கேட்கிறதே ! 
இதயத்தின் பாடல் இனிக்கிறதே!
சிந்தனைப் பறவை எழுந்து நின்றே 
சிறகுக ளடித்துப் பறக்கிறதே !                  (இரு கை)

விரிகின்ற வானம் தூரமில்லை
விடியல் மனம் விட் டகல்வதில்லை
அடிக்கின்ற அலைகள் ஓய்வதில்லை
ஓய்ந்திட நின்றால் ஏது எல்லை !              (இரு கை)

அன்பெனும் அட்சய பாத்திரத்தில் 
அளைந்திடக்  கைகள் துணையுண்டு 
அள்ளி வழங்கிட மனம் உண்டு 
ஆனந்தம் பகிர்ந்திட இடமுண்டு                (இரு கை)

இதயத்தை அள்ளி இறைத்திடு வா 
இறைவன் அளித்த வரம் இது வே 
இன்பத்தை எங்கும் கண்டிடலாம் 
இருப்பதைக் கொடுத்து வென்றிடலாம்   (இரு கை)

--கி. பாலாஜி
03.12.2018

Thursday, November 1, 2018

சாம்பல் கவிந்த செந்தழல் !

சாம்பல் கவிந்த செந்தழல் !



உலர்ந்து வீழும் இலைச் சருகும் 
உடனே உலரும் பனித்துளியும்
ஒருவர் மனதிலும் நிற்பதில்லை 
ஒருவித சலனமும் தருவதில்லை 

இலைச் சருகும் பனித்துளியும் 
இயன்ற பயனைத் தந்த பின்னும்  
தம்முள் தாமே எரிந்தவியும்
தம்முள் தாமே நொந்தழியும் 

ஊமை கண்ட கனவைப் போலும்
பாலையிற் பெய்த நிலவைப் போலும்
வெளியே என்றும் தெரியாது
வேதனை மாத்திரம் மறையாது ! 


கி.பாலாஜி
01.11.2018 

Friday, October 19, 2018

காற்றில் கலந்தான் தம்பி கணேசன்.....



காற்றில் கலந்தான் தம்பி கணேசன்
காவிரி ஓடும் குடந்தையில் வளர்ந்த 
ராஜி ராமநாதனின் புத்திரன்
ரம்மிய மாகயெம் சிந்தையி லமர்ந்தோன்!

மனதை நிறைக்கும் மந்திரச் சிரிப்பும் 
பொங்கும் இளமை பூத்த உருவும்
இளமை மாறா திருக்கும் பேச்சும்
இயல்பாய் அமைந்த அருமைத் தம்பி !

இந்த உருவம் ஒன்றே என்னுள் 
என்றும் நிறைந்து நிலைத்து நிற்கும்!
இனிமை பகர்ந்து எண்ணம் நிறைக்கும்!
மறையாச் சுடராய் மனதில் நிலைக்கும்!

அவனுடன் கழித்த நாட்கள் அனைத்தும் 
அரை நொடிக்குளென் மனதில் பொங்கி 
வெள்ளம் நிறைந்த காவிரி ஆறாய்
வெற்றிலைக் கொடிக்கால் பசுமை வெளியாய்

அலையென மோதிக் கலைந்து செல்லும் !
அனைத்தும் நினைவை நிறைத்து வெல்லும் !

சித்திர வடிவிலோர் சின்ன கணேசன்
சிறிய அறைக்குளோர் சைக்கிளில் லமர்ந்து 
சுற்றிச் சுற்றி வந்தெமை நோக்கிப் 
பெருமிதத் துடனே பார்த்தவோர் பார்வை !

இன்றும் மனதில் அகலா திருக்குமிக்
காட்சி யொன்றே குடந்தை சென்ற 
நானும் தங்கை இருவரும் முதலில் 
சின்ன கணேசனைக் கண்டதோர் கடிகை!
அன்றெ மக்குப் பிராயம் எட்டு
அவனோர் இரண்டு வயதுக் குழந்தை!

நாட்கள் கழிந்தன நலன்கள் பெருகின 
நகர மேனிலைப் பள்ளியதனில் 
நல்லாசிரியன் எனப் பெயர் பெற்றான் !
நலமே நவின்றான் நலம் பல புரிந்தான் !

நல்லதோர் நண்பன் ஆனான் எனக்கும் !
அவனுடன் கழித்த நாட்கள் இனிக்கும் !
காலம் வரையும் கோலம் கசக்கும் 
சில பல நினைவுகள் சிந்தையில் நிலைக்கும் !

வாணியின் அருளால் பெற்ற வரத்தினால் 
வளர்த்த மாணவ மணிகள் எத்தனை !
அறிவும் அன்பும் ஒன்றாய் அளித்த 
ஆசிரியப் பெருந்தகை இவனே அன்றோ !

சரஸ்வதி தேவி அருளிய செல்வம்
சமமாய் பகிர்ந்து கொடுத்தத னாலோ 
ஸரஸ்வதி பூஜா தினமாய் பார்த்து
அழைத்துக் கொண்டாள் அன்னை தன்னிடம் !

நினைவில் மாத்திர மேயினி யனைத்தும்!
நெஞ்சம் கனத்த நிலையில் மாத்திரம் !
நீறுபூத்த நெருப்பாய் மனங்கள் 
கனன்று கனன்று கவியும் உள்ளில் !

காலக் காற்று வீசிடும் வீச்சில் 
கனத்த நினைவும் பஞ்சென மெலியும் !
கண்கள் சுழன்று விரியும் கனவில் !
காலை விடியும் காரியம் புரியும் !


--சிந்தையில் நிலைத்தயெம் 
சின்ன கணேசனின்
சிற்ப நினைவை 
வடித்த வரிகள்!

கி.பாலாஜி
அக்டோபர் 18 2018

அகத்தில் நிறைந்த நாதம் !



நாமறி யாமல்
நமக்குள் தோன்றும்
நல்லொரு உணர்வே
நட்பு !
அந்த உணர்வில்
கனிந்த கனியாய்
இருந்தது உமது 
நினைவு!

நினைவில் நிலைத்து 
என்றும் பிரிய 
இயலா ஒருவகை 
உணர்வு 
உம்முடன் எனக்கு 
என்றும் உண்டு 
என்பதை உணர்ந்த 
மனது !

காணும் நேரம் 
வாய்க்கும் போதெல்லாம் 
கனியாய் இனிக்கும் 
பேச்சு !
பதிலுக் கெதுவும் 
எதிர்பா ராத 
பாசம் உமது 
மூச்சு !

அந்த உணர்வு 
காற்றில் என்றும்  
கலந்து எம்முடன் 
உலவும் !
ஆழ்ந்த நினைவாய்
அமுத இசையாய்
அகத்தில் நாதம்
நிறையும் !

மனித நேயம்
என்னும் குணத்தால்
மனதை நிறைத்த
மனிதர் !
உடலை உதிர்த்து
மறைந்த போதும்
உணர்வில் கலந்த
புனிதர் !



-- கி .பாலாஜி
30.09.2018

நட்பாய் நிறைந்த 
திரு.ராஜகோபால் 
அவர்களின் நினைவுக்காய் !

Sunday, October 14, 2018

காமாக்ஷி கருணா ஸாகரீ

காமாக்ஷி கருணா ஸாகரீ

 ராகம் : கமலமனோஹரி/பாகேஸ்ரீ



காமாக்ஷி கருணா சாகரீ
கமலா மனோஹரி
    கடைக்கண் திறந்தெமை
                          கடாக்ஷிப்பாயே.                 (காமாக்ஷி)

    கரும்பு வில்லதனைத்  தொடுத்து
                       புஷ்ப பாணங்க ளெய்து              (காமாக்ஷி)

     கரும்பு வில்லதனைத்  தொடுத்து
     புஷ்ப பாணங்களை எய்து         
     காமக்ரோத மதமாச்சர்யங்களை
                               அழித்தே எமக்கருள் புரிவாயே.      (காமாக்ஷி) 

கலியுகம் தன்னில்
கடுகி வந்தருள் புரி
காஞ்சியில் அமர்ந்த
கற்பகத் தருவே
கணம் கணந்தோறுமுன்
பக்தியில் திளைத்திட
கருணை புரிந்திடும்
                                           கண் கண்ட தெய்வமே.            (காமாக்ஷி)


 -கி.பாலாஜி
 11.10.2018
 காலை 10.45
(PC : Anand and Team)

Friday, August 17, 2018

இயற்கையின் சீற்றம் இயல்பே !

இயற்கையின் சீற்றம் இயல்பே !
------------------------------------------------------------


கணக்கிலடங்காக் குற்றம் புரிந்தோம்
காலத்தினையே சினம் கொளச் செய்தோம்
காட்டினை அழித்து நாட்டினைப் புரிந்தோம் 
கட்டிடங்களைக் காடாய் வளர்த்தோம் 

சூழ்வெளி கெடுத்துப்  பாழ்வெளி படைத்தோம்   
சுந்தரக் காற்றின் சுதந்திரம் கெடுத்தோம் 
ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் துளைத்தோம் 
அருமை கிராமச் சூழலை அழித்தோம் 

செயற்கை உரத்தைச் சேர்த்துத் தெளித்தோம் 
இயற்கை வித்தின் வீரம் அழித்தோம் 
இயற்கை உரங்களை இலையெனச் செய்தோம்
இன்னரு ளமுதின் தரத்தைக் குறைத்தோம் 

தொழில்வள மதனைக் கூட்டிட நினைத்து 
எழில்வள மனைத்தும் இழந்தே நின்றோம் 
தொன்மைக ளெல்லாம் தோற்றுத் தொலைத்தோம் 
தொல்பொருள் பலவும் போயின களைந்தோம்

இத்தனை செய்தும் இன்னல்கள்  புரிந்தும் 
இயற்கை அன்னை பொறுமை காத்தாள்
எல்லை மீறிட அன்னை சினந்தாள்
இருக்கும் அழகை அழித்திட முனைந்தாள்

கண்கெட் டழிந்தோம் கதிரவ னொளியைக்
கண்டிட விழைந்தோம் காலம் கடந்தோம் 
எத்தனை பிழைகள் யாம் புரிந்தாலும்
இத்தனை சீற்றம் தகுமோ தாயே !

அத்தனை பேரும் உன்மக வன்றோ 
அத்தனை அழகும் உன்னழ கன்றோ
எத்தனை வளங்கள் அழிந்து போயின 
எத்தனை உயிர்கள் மடிந்து போயின !

இதுபோல் தவறுகள் இனி நாம்புரியோம் 
இன்னல்க ளிழைத்தோம் இக்கணம் அறிந்தோம் 
எம்மை ஒறுத்தது போதும் நிறுத்தாய் !
எம தன்பேநீ என்றும் எம் தாய் ! 

அன்னை சினத்தால் அழித்தவை யனைத்தும் 
அவளே தருவாள் தவறுகள் மறப்பாள் 
அவள் இனிநினைத்தால் அனைத்தும் மாறும் 
அவள்கண் திறந்தால் பொழுதுகள் புலரும் 

காலை மலரும் கதிரவ னொளிரும் 
பூவைப் போலப் பொன்னொளி படரும் 
பொருந்திய வளங்கள் போற்றிக் காத்திடப்
போயிடும் துயரம் புல்நுனிப் பனியென !

--கி.பாலாஜி
ஆகஸ்ட் 17  2018 
(Written during  #KeralaFloods )

Friday, July 20, 2018

வாராது வந்த மாமணியைத் தோற்றோமோ !

'வாராது வந்த மாமணியைத் தோற்றோமோ' 



காணாமல் தவிக்கின்றோம் 
அந்தக் கண்ணின் மணியதனை,
கேளாமல் தெய்வமீந்த 
வரத்தின் பேரொளியை !

பொழுது விடிந்தால் 
புலனத்தில் அவன்பதிவு
காணாமல் நாமென்றும் 
கடந்து சென்றதில்லை!
பாரதியைக் கொண்டாடிப் 
பாரெங்கும் பவனிவரும் 
பதிவுகள் பலதந்து 
போற்றிப் பரவிடுவான்!

தேசத்தின் நலமொன்றே 
தெய்வமெனப் போற்றிடுவான்
தீய வேடங்கள் 
அனைத்தையுமே தன்னெழுத்தால்
கீறிக் களைந்திடுவான்!
கிழித்தே எறிந்திடுவான்!

பத்திரிகை தருமத்தைப் 
பாலித்தவன் இவனே!
பகட்டற்ற கருணையெனும் 
சொல்லுக்குப் பொருளதனைக் 
காரியத்தால் காண்பித்துக் 
கண்களை நிறைத்திட்டான்!

மறைந்துவிட்டான் எனச்
சொல்வதெல்லாம் பொய்!
மனதில்
நிறைந்துவிட்டான் என்ற 
நினைவொன்றே மெய் !

மந்திரச் சொற்களால் எத்தனை
மனங்களுக்கு பலம் தந்தான்!
மனதார உடனிருந்து
மனங்களின் வலிதீர 
மருந்திட்டு மாயம் 
பலபுரிந்தான்!

மற்றுள்ளோர் அவன்செய்த 
நற்செயல் தனைப்புகழ்ந்து
சொல்கையிலே அல்லவோ 
அறிகின்றோம் நாமும் 
அது குறித்து,
அந்த
அன்பான மனம் குறித்து !

வலது கை கொடுப்பதை
இடது கை அறியாமல்
எத்தனை செய்துள்ளான்
என்பதனை நாமும்
இன்றன்றோ அறிகின்றோம்!
இதயம் நலிகின்றோம்!

இதனைப் புரிந்துகொள்ள
இப்படிப் பட்டதோர்
இழப்போ தேவையென 
நெஞ்சம் கனலாகி 
நெருப்பினிலே வேகின்றோம் !

வெந்து தணியுமோ 
இந்த வேதனைக்காடு !
வெந்துயர் சாக்காட்டின் 
மனமென்னும் வீடு !!

--கி.பாலாஜி 
05.07.2018

மவுனங்களின் இசை !

மவுனங்களின்  இசை !
---------------------------------------
வெந்தழலும் வெள்ளமும்
தண்மனதின்  வெண்சிறகை
விரித்துச் சிரித்திடவே
சிரித்து மகிழ்ந்திடவே,
சீரியதோர்  செந்தமிழில்
வரியெழுதும் கவியங்கே
வந்து பிறக்கின்றான் !
வான் தொடவே தான் முழங்கி
வண்ணமுற  இசைக்கின்றான் !

எங்கெங்கும் வண்ணமயம்
எண்ணங்கள் அன்புமயம்
ஏந்தி வரும் சொற்களெல்லாம்
இசை கொண்ட நாத லயம் !
பண்ணும் பதமும் தன்
பாதையிலே ஜதிபோடப்
பேச்சற்ற மௌனங்கள்
பாடுகின்ற ராகலயம் !

  பேச்சற்ற மௌனங்கள்
  பாடுகின்ற ராகலயம் !
  பிரபஞ்சமே இமைமூடி
  ரசிக்கின்ற இன்ப வரம் !


--கி.பாலாஜி
  ஜூன் 2018



Monday, May 28, 2018

அன்பின் உருவம் அம்மா !




அன்பின் உருவம் அம்மா !
 அம்மா என்று சொல்லும்போது
அன்பைக் காண்கின்றேன்
அன்பின் உருவும் அவளின் உருவும்
ஒன்றென அறிகின்றேன்

அம்மா காட்டும் அன்புக் கென்றும்
காரணம் கிடையாது
அம்மா காட்டும் பரிவுக்கென்றும்
விலையே கிடையாது

அம்மா என்றொரு சொல்லின் சுகமோ
சொல்லில் அடங்காது
அம்மா என்பது ஆரம்பம் அது
என்றும் முடியாது

அன்னையின் கடனைத் தீர்க்க நினைப்பது
ஆபத்தே யாகும்
அன்னையின் நினைவு என்னும் நிழலில்
வாழ்வது வரமாகும்  



--கி.பாலாஜி
13.05.2018

This has been composed and beautifully rendered by my wife LAKSHMI BALAJI, which you can hear by clicking this link
https://soundcloud.com/saransang/lb-anbin-uruvam-amma-online-audio-convertercom