Face Book LIKE

Monday, September 3, 2012

வாணீ அருள்வாய்!


வாணிஅருள்வாய்!       ராகம்: மலஹரி


வெள்ளைக் கலையுடுத்தி வேதப் பொருள் விளங்க
வீணை யிசைத்து வரும் வாணியே
தெள்ளுத மிழில்மன மள்ளும்வ கையிலொரு
பாட்டி லுனை வாழ்த்த அருளுவாய் !

அஞ்சு மன மதனின் அலையும் நிலைய கற்றி
அமைதி யெனைய டைய அருளுவாய்
கெஞ்சும் எனைப் பார்த்து கொஞ்சும்ரா கங்கள்
கோடி உளம் சேர அருளு வாய்!

சொல்லும் பொருளுமெனச் செல்லு மிணைசேர்த்து
இசையை யுடன்சேர்த்து வாழ்த்துவேன்!
வெல்லும் வழிகாட்டி வேட்கை தனையோட்டி
வேண்டும் கல்விதந்து தேற்றுவாய்!

காலம் முழுமைக்கும் கண்கள் தனைமூடிக்
கருணை யுனைப் பாட வேண்டுவேன்!
கற்ற கல்வி என்றும் உற்றதுணையென்று
உதவி எனைக்காக்கச் செய்குவாய்!

மௌன நாதம் !

                                          மௌன நாதம்

சம்போ மஹாதேவ தேவா - சிவ
சம்போ மஹாதேவ தேவேச சம்போ                                          (சம்போ)

அலைபாயும் மனமிந்த நேரம் - சிவ
சம்போ வென்றுன்பா தம் தனை நாடிப் போகும்
அன்பேதா னுருவான தெய்வம் - நீ
அணைப்பா யென்றறிவேனுன் துணைநாடி வந்தேன்          (சம்போ)

எங்கெங்கு சென்றாலும் உள்ளே - சிவ
சம்போசம் போவென் றுன் நாம மொன்றே
ஓமென்ற ஒலியாகிப் பெருகும் - என்னில்
பலநாளாய் விளங்காத பொருளெல்லாம் விளங்கும்            (சம்போ)
                                                                                     
ஐந்தெழுத்து மந்தி ரம்நாதம் - மௌன
குருவாகி உபதேசம் செயவந்த வேதம்
வரவேண்டும் வரவேண்டும் ஞானம் - அது
வந்தால்பின் னெதுவேண்டும் எனவேண்டும்  மௌனம்       (சம்போ)

மணக்குள விநாயகன் !



                                  மணக்குள விநாயகன்     ராகம்: ஹம்ஸத்வனி

மணக்குள விநாயகனே
மனத்துள் நீ நாயகனே
மந்திரப் பொருளோனே
மங்களம் அருள்வோனே                                                       (மணக்குள)

எருக்கம் பூவிற்கும் ஏற்ற்ம் தந்தாய்
எதிர்ப் படுவோர்க்குத் துணிவைத் தந்தாய்
சூட்டிய மாலையில் சுடரொளித் தோனே
சுந்தரன் மகனே சுகம் தருவோனே                                    (மணக்குள)

செம்மலர்ப் பதம்நாடி வந்தனை புரிந்தே
வந்துனைத் துதிப்போர்க்கு வாழ்வளிப் பவனே
இம்மெனும் முன்னே ஈந்தனை வரம்நீ
இகபரம் இரண்டுக்கும் இனியொரு துணைநீ                 (மணக்குள)

(K.Balaji  October 25 1989)