Face Book LIKE

Tuesday, June 6, 2017

உலகின் மூத்தகுடி உழவன்

(Photo Credit : Times of India)

உணவும் உடுக்கையும் 
இழந்த உழவனின் 
இடுக்கண் களைவ தாரிங்கே ? 

உண்பதோர் நாழி 

அளப்பதற் காளில்லை

உடுக்கும் நாலுமுழம் 

கிடைக்க வழியில்லை

மயிர்போயின் வாழாக் 

கவரிமான் போலிங்கு 
வாழ்ந்தும் ஆயிற்று ! 

சுவாசிக்கும் காற்றுக்கும் 

விலை கேட்கும் காலம்வரும் ! 
வீதியில் விழுந்து 
புரண்டலையும் நேரம் வரும்!

பிச்சையோ நாம் கேட்கின்றோம்?  

பிழைக்க வழி யாமறிவோம் ! 
பிழைத்தும்மைப் பேணவும் 
யாமறிவோம்!   

வீழ்ந்துலகைக் காக்கின்ற 
மழைத்துளியை 
வீணாக்கி விடவேண்டாம் ! 
விவசாயம் செய்வதற்கு 
வகை செய்தால்

அதுபோதும்! 

வீதிவரை வரும் தென்றல் 

வீட்டினுள்ளும்  நுழைந்தெம்மை  
நலன் விசாரிக்கும் 
நாள்தோறும்! 

விவசாயம் செய்திடவே 
வகை செய்து தாரும் !

விவேகம்  அதுவே !  

விளக்கமும் அதுவேதான் !  

சுழன்றும்  ஏர்ப் பின்னதே 
உலகென்பார்!  
சுழன்று   கொண்டேதான் 
இருக்கின்றான் உழவன்  !
துன்பத்தில்   
உழன்று  கொண்டும்தான் !


உணவின்றி நாட்டின் 

உழவன் மரிப்பதுவோ ?
உணவை அளிக்கின்ற அவனன்றோ 
உலகின் மூத்தகுடி ! 
உணர்வீர்  அவன் பெருமை! 
உணவின்றி அவன்மரித்தால் 
உலகே மரிப்பதுபோல் ! 
அன்னை மனம் நொந்தால் 
அவர்மக்கள் வாழ்வாரோ 
வளம்பெற்று ?


--கி.பாலாஜி

10.04.2017

மாலை 4.15

Saturday, March 11, 2017

போதி மரம் !



பால்வெள்ளி நிலா வீசும்
பகட்டுத்தா ரகைகள் மின்னும்  
பலவண்ண நிறங்கள் காட்டும்
வான மேயென் கல்விச் சாலை !
    வான மேயென் கல்விச் சாலை !
    வாழ்வினைப் பயக்கும் சோலை !

நேற்றைக்கு அழுமாற் போலே 
அமுதத்தைப் பொழிந்த வானம்
இன்றைக்குத் தெளிவாய் நின்று 
சிரிக்கின்ற தென்னே யென்றேன்!

எல்லையற்ற தன்மை கண்டென் 
எண்ணமும் விரியக் கண்டேன் 
சிந்தனை, வானம் போலே 
விரிந்தாலே விடியும் என்றேன் !

எழிலார்ந்த காவும் கண்டேன்
எத்தனையோ மலர்கள் கண்டேன் 
முன்னின்ற மலரின் செடியில்
முள்ளொன்றும்  இருக்கக் கண்டேன் 

இன்பங்கள் என்றும் உண்டு
இடையிடையே துன்பம் உண்டு
என்பதை உணர்த்தும் பாங்கில் 
முள்ளதுவும் சிரிக்கக் கண்டேன்

வண்ணத்துப் பூச்சி பூவைச் 
சுற்றிவந்தமரக்   கண்டேன் 
சுவையான தேனை யதுவும்
சுவைத்துண்ணும் பாங்கு கண்டேன் 

புவிவாழ்வு சிறிதென் றாலும் 
பூவினில் தேனைப் போலே 
நிறைந்திடும் இனிமை உண்டு
நீயதை உணரல் வேண்டும் 

என்றெனக் குணர்த்தும் வண்டு
எண்ணத்தில் அமர்ந்து கொண்டு 
ஏழிசை கீதம் ஒன்று 
தன்னுள்ளே பாடிக் கொண்டு !

இதுநாளும் தேடித் திரிந்த 
குருவைநான் கண்டுகொண் டேன் 
காண்கின்ற பொருள்க ளெல்லாம் 
குருவேயென் றுணர்ந்து கொண்டேன் 

'எப்பொருள் யார்யார் வாய்க் 
கேட்பினும் அப்பொருள் தன்னில்'
உறைகின்ற உண்மை தன்னை
உணர்த்துமோர் குருவைக் கண்டேன் !

--கி.பாலாஜி
05.08.2016

Wednesday, March 8, 2017

மகளிர் தினம்தினம்

மகளிர் தினம் தினம்
_____________________
மாலையாய் வாழ்வில் நுழைந்து
மதலையால்
இல்லம் நிறைத்து,
மனமாளும்,
மனையாளும்
மனைவியாய்
இல்லுள்ளோர்
இதயம் நிறைத்து,
என்றென்றும்
எல்லோர் வாழ்வும் மலர்மணம்
பரவச் செய்யும்
மகளிருக் கொவ்வொரு நாளும் மங்கலப் பெருநா ளென்போம்
நாம்
மாதவம் செய்தோ ரென்போம் !
--மகளிர் தின வாழ்த்துக்கள் !
----கி.பாலாஜி
08.03.2017
பகல் 12 மணி