Face Book LIKE

Friday, July 24, 2020

அம்பிகை நேரில் ஆடி வந்தாள்

அம்பிகை நேரில் ஆடி வந்தாள் 
ஆடி வெள்ளியில் அருள வந்தாள் 
திருவருள் புரிந்திட மனம் கனிந்தாள் 
தினந்தினம் பூஜையில் கொலு வமர்ந்தாள்
(அம்பிகை)

ஆறுதல் தருமோர் ஆனந்தபைரவி 
அன்பினைப் பொழியும் அம்ருத வர்ஷிணி 
இகபர சுகம்தரும் ஈசமனோஹரி
ஈந்திடும் கருணைக் கடல் கல்யாணி  (அம்பிகை)

ரம்மியம் மனதினில் சேர்த்திடும் ரஞ்சனி
ராக மாலையாய் அமர்ந்தருள் லலிதை
கொஞ்சிடும் மழலை கோகிலத்வனியாள்
அஞ்சுதல் அகற்றிட ஆபோகி வருவாள் (அம்பிகை)

வாழ்வினில் வசந்தங்கள் சேர்த்திடும் வசந்தா 
வந்தனை புரிந்தேன் நிதமவள் பதம் தான்
வசந்த பைரவி பொழிந்தாள் அருள்தான்
விஜயநாகரி திருத்தாள் துணைதான் (அம்பிகை)

கி.பாலாஜி
24.07.2020
பகல் 2 மணி

Thursday, July 23, 2020

திருவருள்தான் பிறந்ததுவோ ராமா


திருவருள்தான் பிறந்ததுவே ராமா 
திருவாய்தான் மொழிந்ததுவே ராமா 
திருவீய்ந்து நின்றதுவே ராமா
தீபத்தின் சுடரெனவே ராமா

பார்புகழும் நின்நாமம் ராமா
பன்முறைநீ சொலவைத்தாய் ராமா
பல்லாண்டு பாடுகிறேன் ராமா
வில்லாண்ட தோள்வலியோய் ராமா

வில்லெடுத்த வீரமதை ராமா
சொல்லெடுத்துப் பாடவைத்த ராமா
கல்லுக்கு உயிர் தந்த ராமா
காசினியைக் காக்கின்ற ராமா

மனமார்ந்த பக்திக்கே ராமா
கதிமோட்சம் தனையீந்த ராமா
மானவனா யவதரித்த ராமா
மனமதிலே ஒளிவீசும் ராமா

நிதிதானோ சுகமீயும் ராமா நின்
ஸந்நிதியே சுகமீயும் ராமா
நினைவொன்றே நிதியன்றோ ராமா
நின் ளருளொன்றே கதியன்றோ ராமா

கி.பாலாஜி
08.05.2020
பகல் 2.30

Wednesday, July 22, 2020

அரவண துயிலும் அரங்கநாதா

Translation of Slokam SHANTAKARAM BHUJAGASAYANAM
in Tamil by KB and sung by LB

அமைதியின் உருவாய் அரவினில் துயில்வோய்  
ஆலிலை வயிற்றில் அரவிந்தம் உடையோய் 
அமரர்கள் அனைவரும் தொழுமோர் அரசே 
அனைத்துலகிற்கும் ஆதாரம் நீ !

ஆகா யத்தையும் கடந்த நற்பொருளே 
அழகிய கொண்டல்  நிறமுடை யோனே 
நலமே நிறைந்த திருவடி வானோய் 
திருமகள் திருமனம் ஆளும் வடிவோய்

தாமரைக் கண்ணா தவமுனிவோரின் 
சிந்தையில் அமர்ந்த சீரிய திருவே 
பாற்கடல் அமரும் பரமா வணக்கம் 
அச்சங்க ளகற்றும் அச்சுத சரணம்

அகிலத்தை ஆளும் அரசே சரணம் 
அண்டங்க ளெங்கும் நிறைவோய் சரணம் 
திருமகள் மனம் உறை தேவே சரணம் 
திருவேங் கடவா சரணம் சரணம்

திருமலை உறையும் திருவே சரணம் 
திருமால் திருவடி சரணம் சரணம் 
திருமறை போற்றும் திருத்தாள் சரணம் 
திருவடி தொழும்பே றளிப்பாய் சரணம்

--- கி. பாலாஜி
     27.05.2020
     காலை 8.45

'அச்சங்களகற்றும்' என்பது வரை வடமொழியில் உள்ள 
'சாந்தாகாரம்' என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு.

உயிருள்ள சருகுகள்


உணர்வுகள் காய்ந்தாலும் 
உதிர்ந்தேதான் வீழ்ந்தாலும் 
சருகாய் சரிந்தாலும் 
சரித்திரம் மறைவதில்லை! 

எண்ணத்தின் மூலையிலே 
எங்கோ ஓர் அறையினிலே
பனியிதழின் ஈரம் மட்டும் 
சிலிர்த்துச் சிரிக்க வைக்கும்

பார்வைகள் மட்டும் தான் 
பழுதடைந்து போனாலும்
பார்வைக்குப் பின்னிலையில் 
பசுஞ்சோலைக் குளிர் உண்டு 

வேனலில் மழை எனவே 
பாலையிலே பனி எனவே 
வெண்பளிங்கு மனமுண்டு 
வெதுவெதுப்பாய் நினைவுண்டு

நீறாய் பூத்திருந்த 
நிலையினிலும் அதனுள்ளே 
நெருப்பின் சூடுண்டு 
நினைவின் மனமுண்டு!

உதிர்ந்த சருகினிலும் 
உயிருண்டு உணர்வுண்டு 
ஒரு சில மனங்களதை 
உயிர்ப்பிக்கும் குணமுண்டு!

--- கி.பாலாஜி
26.06.2020
இரவு 11.30

விலகிப் போ 'கொரோனா'

விலகிப் போ கொரோனா !

அன்றாடங் காச்சிகளுக்கு
ஏதப்பா ஊரடங்கு ?
  அன்றாடங் காச்சிகளுக்கு
  ஏதப்பா ஊரடங்கு ?

'விரும்பிப் போனால் 
விலகிப் போகும்'
என்பார் சொல்லிக் 
கேட்டதுண்டு!
நாம் விலகி விலகி 
நிற்கிறோம்; அதுவோ
விரும்பி விரும்பியே 
வருகிறதே ;
கழுவிக் கழுவி 
விடுகிறோம் ;
கையில் ஒட்டித் 
தொலைக்கிறதே!
தொடாமலே 
சிணுங்குகிறோம்,
படாமலே நகர்கிறோம் ;
ஆனால் அதுவோ 
தொடாமல் கூடப்
படருகிறதே !

விலகி இருந்தே 
பழகுவதும்,
வீட்டுக்குள்ளே
முடங்குவதும்.....
  விலகி இருந்தே 
  பழகுவதும்,
  வீட்டுக்குள்ளே
  முடங்குவதும்.....
இன்னும் எத்தனை 
காலம் நடக்கும் 
இந்தக் 
கண்ணாமூச்சி ஆட்டம்? 

அன்றாடங் காச்சிகளுக்கு
ஏதப்பா ஊரடங்கு ?
'கஞ்சி வருதப்பா' என்று 
பாடி விட்டால் 
வந்து விழுமா கஞ்சி?
இவர்களுக் காக வேனும் 
'கண்ணத் தொறக்கணும் சாமி 
இது வானம் பாக்குற பூமி'...

--கி.பாலாஜி
11.07.2020
இரவு 10 மணி

அழிந்துபட்ட அடையாளங்கள்

அழிந்துபட்ட அடையாளங்கள்
மனதிலும் கூடக் 
குரல் 
கேட்காத தொலைவில் 
மறைந்து விட்டேனோ 
நான் ?
அடையாளங்களே 
அழிந்துவிட் டனவோ? 
அத்தனை காலங்கள் 
கடந்துவிட் டனவோ?

நெருங்க வியலாத் 
தொலைவில் இருப்பினும்
நெருங்கியே 
நாம் வாழ்ந்த காலங்கள்
மனதில் !
அண்மையைப் பரப்பும்
அழகிய கணங்கள் !

கனவுகள் காணும் 
தெம்புள்ள வரை, 
மனதில் 
மொட்டுகள் என்றும்
விரிந்த வண்ணமே! 
அன்பெனும் மணமும் 
பரவிய வண்ணமே !

--கி.பாலாஜி
18.07.2020

Gist of the 
Above, in English:

Looks like my voice doesn't even 
linger in your mind ! 
Have I gone that far from you? 
Has my identity got erased? 
Have that many number of 
years passed off?

We were living so far , but 
Feeling so very near, once!
Proximity was prominent then !

So long as the mind is 
capable of dreaming,
The buds of Memories
keep blossoming !
The Aroma of Love
Keep spreading all over!

ராம நாமமெனும்...

ராமநாம மெனும் வேதமே
ராக தீபம் ஒளிர் கீதமே
ஆடும் மனதைநிலை 
நிறுத்தியென்றுமொரு 
ஆனந்தம் தரும் 
நாமமே.      (ராம)

அன்பு என்ற ஒரு 
பதத்தில் நிலைத்து மனம் 
அலைந்தி டாதுவைக்கும் 
மாயமே   
மாய மோகங்களை 
மனதைவிட்டு என்றும்
நீங்கச் செய்துவிடும் 
ராமமே.         (ராம)

தோன்றும் நினைவுளைத் 
தொடர்ந்து சென்றுவழி 
மறித்து நின்றுநெறிப் 
படுத்துமே !
நெஞ்சில் அமைதியெனும் 
நெறியை ஏற்படுத்தும்
நீதியாய்  திகழும் 
நாமமே       ‌(ராம)

ராம நாமமேஸ்ரீ 
ராம னுக்கெதிர்
நின்றுவெல்லு மோருபாயமே
என்று காண்பித்த 
பக்தியின்திரு
உருவமா மெம் அனுமனே
அவனை அன்புடன்
வணங்கும் பக்தருக்கு 
என்றும் அருள்புரியும் 
ராமமே       
அஞ்சும் தேவையொன்றும்
இல்லை யென்று தினம்
உறுதி அளிக்குமோர் அனுமமே             
(ராம)

--- கி.பாலாஜி
05.07.2020.
பகல் 12.15

அவனே ராமன்

ராகம்: யமுனா கல்யாணி

அவனே ராமன் அவனே ராமன் 
அவனே..... ஸ்ரீராமன் 
ரகு குலம் தழைத்திடத் தோன்றிய மணியாம் 
ரமணீய ரூபன் ரகுராமன்            (அவனே)

அன்பின் உருவம் பண்பின் சிகரம் 
பணிவின் பெருமை பரப்பிய புனிதம்
ராம ராஜ்யம் என்பதை நமக்கு 
எடுத்துக் காட்டாய் நிறுவிய சரிதம் (அவனே)

ஆயிரக்கணக்கில் பெருமைகள் சேரும் 
அவனோ அடக் கத்தின் திருவுருவம் 
அவனுக்கு உயிர்களில் பேதங்கள் இல்லை 
அன்பின் இனமே அவன் இனமாகும்   (அவனே)

மனதைக் கொட்டிக் கவிழ்ப்போம் அவனின்  
மலரிணை தனிலே இன்னொரு மலராய் 
மாதவம் செய்தவர் ஆவார் அவனை 
மனதால் நினைத்திடும் உயிரின மெல்லாம்
(அவனே)

கி.பாலாஜி
22.07.2020
காலை 10 மணி

Sunday, July 5, 2020

கனவில் மலர்ந்த கார்த்திகை நிலவு



பூவின் மணமும் தேனின் சுவையும்
புலரிக் கதிரில் ஒளிரும் ஒளியும்
பனியின் மென்மைத்தன்மை அதுவும்
பாலின் வெண்மை வெகுளிக் குணமும் 
ஆனைப் பிடியின் நடையின் அழகும்
மானின் கண்ணாய் மருளும் விழியும் 
பொன்னின் நிறமும் புவியின் திறமும்
போதவிழ் மலரின் பொன்றா அழகும்
ஒன்றாய்க் கொண்டே ஓர் உருவாகிக் 
கன்னிப்பெண்ணாய் கண் முன் நின்ற
கவினூ றிதழே காவியச் சுவையே,
கனவில் மலர்ந்த கார்த்திகை நிலவே
கனலும் கவிதை வரிகளின் எழிலே

கனியே கனியில் ஊரும் ரசமே
கலையே கலையின் பொருளே அருளே 
கண்ணதாசனின் கவிதைச் சுவையே
இன்னும் எழுதாக் கவியே இசையே
இனிக்கும் சுவையை ஈனும் அழகே
இறையின் அருளால் என்னிடம் வந்த
இயல்பே, இணையே இல்லாப் பொருளே,
ஈவாய் எனவே கேளா வரமாய்
என்னைச் சேர்ந்த இன்னிசை உயிரே!
இன்றும் என்றும் இதுபோல் பொன்றா
இதயத் தழகுடன் இணைவாய் வாழ்க !


-- கி. பாலாஜி
01.07.2020
காலை 11.30

Wednesday, July 1, 2020

உழைக்கும் வர்க்கம்


காற்றழுத்த மண்டலமே 
காலியாகி விடும் போலக் 
காலால் அழுத்தி அழுத்திக் 
காற்றனைத்தும் டயருக்குள் 
கொண்டுவந்து நிறுத்தி  
ஓடாய் உழைத்தென்றோ 
உருமாறிப் போனேன் நான்! 
கொரோனா வந்தாலும் எந்தக் கொடுநோய்தான் வந்தாலும்,
உழைக்கும் வர்க்கத்துக்கு 
உழைத்தால் மட்டும்தான்
உண்பது நாழியும் உடுக்கநான்கு முழத்துணியும் !

--கி.பாலாஜி
14.06.2020

நெஞ்சில் நெருடும் முள்




நெஞ்சில் நெருடும் முள்

மாலையிடவும் முடியவில்லை 
மறந்திடவும் முடியவில்லை 
மனதில் சுமக்கின்ற 
பாரத்தை இறக்கி வைக்கச் 
சுமைதாங்கிக் கல்லேதும்
சுற்றுப்புறத்தில்லை !

கண்களால் பல கதைகள் 
நானும் சொன்னதுண்டு;
வெறும் கதை எனக்கேட்டு 
நீ வேறிடம் சென்றதுண்டு!

உள்ளில் அலையடிக்கும் 
ஓங்காரப் பேரிரைச்சல் 
உன் செவிக்குக் கேட்கப்
போவதில்லை பூமகளே!

எத்தனைதான் மனதுக்குக் 
காரணங்கள் புரிந்தாலும் 
காதல் பிறப்பதற்குக் 
காரணமே இல்லையடி !

---கி.பாலாஜி
25.06.2020

மலரே மாதுளை மலரே


You can hear this song in the following YouTube link. The song is rendered beautifully by SMT.Lakshmi Balaji.

https://youtu.be/lS2vH7TLsTE

ஸக மகஸக மகஸக மக ரிஸநி
பரி மரிபரி மரிரிரி பமகரிஸ

மலரே மாதுளை மலரே...

மலரே 
மாதுளை மலரே 
மலரம் போடு 
மதன் வரும் நேரம்
மாலைக ளொடு நீ 
வரவேற்கும் நேரம்
மகிழ்ச்சிக் கடலில் 
திளைத்திடும் நேரம்          (மலரே)

ஆயிரம் விளக்குகள் 
கொண்டதோர் வானம் 
ஆசைக ளோடே 
விரிந்ததுபோலே
அந்தியின் மலராய் 
ஆயிரம் கனவுடன் 
அருமைத் தோழிநீ 
இமை திறந்தாய்.       (மலரே)

பல வண்ணத் தாரகை 
மத்தியிலே 
பாவை நீயும் 
சிரித்திருந் தாய் 
பங்கயக் கண்ணன் 
நண்ணிட நீயும்
நாணத்தி னாலே  
தலை குனிந்தாய்.   (மலரே)


கி.பாலாஜி
26.06.2020
மாலை 5 மணி

Wednesday, June 24, 2020

உருத்திரன் தோத்திரம்

உருத்திரன் தோத்திரம்

Just the Cover Page Picture of this Book by Sri C Sundararamamurthi, my cousin, was the inspiration to write these lines. I won't say that I wrote it. It was nothing but the Grace of Lord Shiva, the lines just flew from my heart. My gratitude to God and my cousin for inspiring me.


உருத்திரன் மலரடி தொழுகின்றேன் 
உலகின் மலர்த்தாள் தொழுகின்றேன் 
உண்மையின் பொருளைத் தொழுகின்றேன் 
ஓங்காரத்தைத் தொழுகின்றேன்

ஒன்றே உருவாம் உருத்திரனே உன் 
முன்னும் பின்னும் தொழுகின்றேன் 
உயிரினம் அனைத்தின் உருவாக 
உயிராய் திகழ்வாய் தொழுகின்றேன்

பண்பே பதமே தொழுகின்றேன்
பழமே சுவையே தொழுகின்றேன் 
நிலவின் குளிராய் நினைவில் நிற்கும் 
நித்தியப் பொருளே தொழுகின்றேன்

பொருளே பொருளின் சுவையாய் நின்ற
பேருரு வேயுனைத் தொழுகின்றேன் 
அறிவே அறிவின் செயலும் ஆனாய் 
ஆறா அமுதே தொழுகின்றேன்

சொல்லே சொல்லின் பொருளும் ஆனாய் 
சோதிப் பிழம்பே தொழுகின்றேன் 
சொல்லாய் உதித்து சொல்லின் உருவாய் 
நின்றாய் சிவமே தொழுகின்றேன்

ஒலியே ஒலியின் உருவே ஆன 
ஓசை நயமே தொழுகின்றேன் 
நாதம் என்னும் வேதத்தணுவே 
நயமே நலமே தொழுகின்றேன்

உணவே உண்ணும் உணவின் சுவையே 
உயிராம் அமுதே தொழுகின்றேன் 
ஊற்றின் நீராய் உவகைப் பெருக்காய் 
உலகைக் காப்பாய் தொழுகின்றேன்

உன்னருள் ஒன்றே உன்னதம் என்றே 
உணரச் செய்தாய் தொழுகின்றேன் 
உன்பதம் ஒன்றே உள்ளம் எங்கும் 
நிறைந்திடச் செய்தாய் தொழுகின்றேன்

அம்மையப்பா தொழுகின்றேன் 
அன்பின் உருவே தொழுகின்றேன் 
ஆசைகள் அழிக்கும் காரணப் பொருளே 
ஆதி சிவமே தொழுகின்றேன்

அருளே அருளின் பொருளும் ஆனாய்
ஆலம் உண்டோய் தொழுகின்றேன்
ஆதர வுந்தன் திருநாமம் தான் 
திருவே பரமே தொழுகின்றேன்

தொழுகின்றேன் திருவெளியாடல் 
தொழுகின்றேன் திருவிளையாடல் 
தொழுகின்றேனுன் அடியார்க் கெல்லாம் 
அடியா ரவரின் அருட்பாடல்          (உருத்திரன்)

-- கி.பாலாஜி
24.06.2020
காலை 11.45

Saturday, April 25, 2020

கற்பகத் தருவின் கருணை நிழல்




கற்பகத் தருவின்கருணை நிழலில் 
காலம் எல்லாம் தவம் இருப்பேன் 
கருணைக் கடல்தன் இமைசற்று திறந்தால் 
கவலைகள் ஏதும் இல்லை
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

கவலைகள் அண்டிடும் காலத்தில் மாத்திரம் 
காலடி நாதனை நினைத்திடும் மனமே 
கண்களை மூடி என்றும் திருவடி 
சரணென்று கிடந்திட முயல்வாயே 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

அத்வைத நாதனின் அருள் கிடைத் திடுமோ 
ஆழ்மனம் தேடிடும் பொருள் கிடைத்திடுமோ 
அருநவ நிதியைத் தேடிடும் மனமே 
அனுதினம் அவன் துதி பாடிடுவாயே 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

கி.பாலாஜி
16.02.2020
காலை 11 மணி

Monday, April 13, 2020

பார்வை

நடக்கும் திசையை மாற்றினால்
நிழலின் இருப்பும் மாறும்
எண்ணம் சற்றே மாறினால்
ஏற்புடைத் தாகும் அனைத்தும்!

உண்ணும் உணவின் சுவையை
மட்டும் உணரும் நாவு
உணவின் பின்னுள உழைப்பை 
உணர்ந்தால் மறையும் நோவு !

கண்கள் பார்க்கும் கோணம் ஒன்றால் 
காரியம் காட்டும் மாயம்
காரியச் சிறப்பு கூடும், அதனில்
கலந்தால் மனித நேயம் !

எண்ணம் ஏற்றம் கொண்டா லன்றோ
செயலும் ஏற்றம் கொள்ளும்
செயலில் மாற்றம் வேண்டும் என்றால்
எண்ணம் மாறிட வேண்டும் !

-- கி . பாலாஜி
13.04.2020
இரவு 7 மணி

Sunday, April 5, 2020

எங்கும் ஒளிமயம்





ஏற்றுக விளக்கு
எங்கும் ஒளி மயம் 
போற்றுக பாரதம் 
தோன்றுக பேரொளி 
மாற்றல ரெல்லாம் 
சென்று ஒளியுக
ஆற்றிடும் சேவைக் 
கரங்கள் மிளிருக 

நன்மையைக் கருதி 
நானில முழுதும் 
நலமே சூழ்கென 
ஏற்றும் விளக்கு 
புன்மை அனைத்தும் 
போவெனப் போக 
புண்ணிய ரெல்லாம் 
ஏற்றும் விளக்கு!

உலகம் முழுதும் 
ஒன்றே ஜோதி 
உள்ளம் அதனில் 
விளங்கும் ஜோதி 
ஊரும் நாடும் 
நோய்நொடி இன்றி 
உயர்ந்த மனதுடன் 
ஏற்றும் ஜோதி !

நலமே சூழ்கென 
நினையா மனத்தின் 
நிலையாத் தன்மைய 
தீமைக ளெல்லாம் 
ஒற்றை விளக்கின் 
ஒருதிரிச் சுடரில்
விட்டில் போலே 
வீழ்ந்து மாய்க !

உள்ளத் தொளியில் 
உவந்து சொல்லும் 
ஒவ்வொரு சொல்லிலும் 
உண்மை  ஒளிருக
உலகம் எங்கிலும் 
வெண்மை பரவுக 
வேற்றுமை மறையுக
 ஒற்றுமை மலர்க !

      ஏற்றுக விளக்கு 
      எங்கும் ஒளி மயம் 
      போற்றுக பாரதம் 
      தோன்றுக பேரொளி !

-- கி.பாலாஜி
05.045.2020
இரவு 7 மணி

Saturday, April 4, 2020

ராமாயண நாயகர்

ராமாயண நாயகர்



ராமாயண நாயகர்
இருவர் பிறப்பு
ஒன்றி வருமோர்
இரண்டுநட்சத் திரங்களில்.
புனர்பூசம் பூசம்
ராமர் பரதன் ;
இலக்குவ னுடனே
இன்னொரு தம்பி
அருநட் சத்திரமாம்
ஆயில்யத்தில்;
திதியோ
ராமனுக்கு நவமி
மற்றவர்க்கு தசமி!

தந்தை தந்த சொல்காத்த ராமன்!
தாய்சொன்ன சொற்படி இலக்குவன்!
தமையனின் அறவுரைப் படியாங்கு பரதன்
அண்ணலார் திருவடி நடத்திய அரசு!
நாடாள் பரதன் தாள்பணிந் தாங்கே
தம்பிசத் ருக்னன் நடந்திட்ட பாங்கு !

அறமே உருவாய் அன்பாம் ராமன்!
அவனின் நிழலாய் இலக்குவ சேவை!
அறத்தின் ஒளியாய் பரதனின் நீதி!
அவனின் நிழலாய் சத்ருக்னன் பாதை!

பொறுமையில் சிறந்த சீரிய பரதனாய்
சேவையில் சிறந்த இலக்குவ மனமாய்
கருத்தாய் கவனமாய் சத்ருக்னனாய்
அனைவரும் போற்றும் அறமே ராமனாய்

வாழ்ந்திட உறுதி கொள்வாய் மனமே
வளமும் நலமும் சேரும் தினமே
அன்னை சீதை அருள்பா லிப்பாள்
அனுமன் துணையும் என்றும் நிலவும் !

கி.பாலாஜி
04.04.2020




Friday, April 3, 2020

உன்னை...உனக்காக.....


உன்னை...உனக்காக...


கண்வழி புகுந்து 
உள் வரை செல்லும் 
உன்னத உணர்வே 
காதல் !

காலம் என்னும் 
கட்டுப் பாட்டின் 
தடைகளை வென்றது 
காதல் !

உருவம் என்னும் 
தோற்றத் தழகில் 
உயிர்ப்பது மில்லை 
காதல் !

உணர்வால் பிறந்து 
உணர்வில் கலந்து 
உள்ளில் மடிவது 
காதல் !

ஊரும் பெயரும் 
நாடும் வீடும் 
வேண்டுவ தில்லை 
காதல் !

உயரிய பண்பின்
வயப்பட் டென்றும் 
உதிப்பது மில்லை 
காதல் !

பெயர்களில் அடங்காப் 
பேதைப் பொருளாய் 
உணர்வில் உதிப்பது 
காதல் !

உன்னை நீயாய் 
உணர்ந்து லயித்து 
உன்னில் கலப்பது 
காதல் !

உந்தன் பெயரோ 
புகழோ பணமோ 
வேண்டுவ தில்லை 
காதல் !

உன்னை என்றும் 
உனக்கென மட்டும் 
உணரும் உயிரே 
காதல் !

--கி.பாலாஜி
02.04.2020
காலை 6.15

Thursday, April 2, 2020

இயற்கை மதித்தல்





இயற்கை மதித்தல் !

கொற்றவை அருள் இருக்கக்
      கொடுநோய்கள் விலகாதோ
பெற்றவள் மக்களையே
      பேணிக் காத்திடுவாள்.
சுற்றமும் நட்புமெல்லாம் 
      பெற்றதாய் மட்டுமன்றோ !
சுகமீந்து காத்திடுவாள்
      செம்மலர்ப் பதம் பணிவோம்!

பதினெட்டு கைகளுண்டு 
      பக்தர்களைக் காப்பதற்கே 
பாரினில் துன்பங்களைப் 
      போக்கிடும் தேவியவள் 
ஆடம் பரமேதும் 
      காட்டாமல் நாமென்றும் 
அன்போடு பதம் பணிவோம் 
      ஆறுதல் அவள் தருவாள் !

பக்தி ஒன்று மட்டும்
      பாமரர்க்குப் போதாது
பாரின் விதிகளை நாம்
      மீறாமல் பணி செய்வோம்
செய்யும் பணிகளிலே
      பலனேதும் பாராமல் 
செய்தால் சுகமளிப்பாள்
      தேவி அருள்புரிவாள்!

அன்பைப் புறக்கணித்தோம் 
      அனைவரும் சமமென்னும்
உண்மையை நாம் மறந்தோம் 
      ஊழ்வினை தொடர்ந்ததுவே
இயற்கை ஈந்திருந்த 
      இனிய வரங்களெலாம் 
பேணிப் போற்றாமல் 
      பேரழிவை நாம் கண்டோம்!

இயற்கை தன்னோடு 
      இயைந்த வாழ்வதனை
இனியேனும் போற்றிப்
      பெருவாழ்வு பெற்றிடுவோம்!
நீராற்றல் தனை மதிப்போம் 
      நீர்நிலைகள் காத்திடுவோம்  
பேராற்றல் தனைப்பெறுவோம் 
      பெருமைகளை நாமடைவோம் !

கி.பாலாஜி
03.04.2020
காலை 9.30



ராம ராம என்ற சொல்லை
      ராகம்   :     தேஷ்

ராம ராம என்ற சொல்லை
ராவும் பகலும் சொல்லி வந்தால்
தேகநோயும் தீருமே
தீரும் பிறவி நோயுமே
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்

அஞ்சும் வினைகள் அனைத்தும் நம்மை
அகன்று எங்கோ ஓடுமே
ஆறும் அனைத்து மனதின் ரணமும்
அன்பு நெஞ்சில் பெருகு மே
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்

சிந்தை முழுதும் நிறையும் ராமம்
விந்தை பலவும் புரியும் ராமம்
என்றும் நம்மைக்கூட நின்றே
காக்கும் ராம நாமம் ஒன்றே
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்

ராமர் வீரம் தன்னைக் கூட
ராம நாமம் தோற்க வைக்கும்
அனுமன் நெஞ்சில் நிறையும் அந்த
ராம நாமம் வெல்லு மே
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்
    ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம்

--கி.பாலாஜி
02.04.2020
காலை 7.45
ராமநவமி தினம்

Wednesday, April 1, 2020

புன்னகை புரிந்தால் போதும்


புன்னகை புரிந்தால் போதும்



எனக்குப் பேசத் தெரியாது - என் 
ரசனையில் குறைவே இருக்காது!

சிறுவர் குழாத்தின் 
இடையே  நானொரு 
சிறுவன் !
இளைஞர் குழுவின் 
இடையில் நான் ஒரு 
இளைஞன் !
முதியோர் கூட்டம்
தனிலே  நானொரு 
முதியோன் !
அனுபவம் ஒன்றே 
அங்கே பேசும் !
அனைத்தும் மலராய்
மணம் வீசும் !
   எனக்குப்பேசத் தெரியாது என் 
    ரசனையில் குறைவே இருக்காது

இலக்கிய வாதிகள் 
இடையில் நானொரு 
இலக்கிய ரசனை 
மிக்கதோர் பிறவி !
இசைக் கலைஞர் 
மத்தியில் நானொரு 
இசையை ரசிக்கும் 
இசைஞன் !
பேசத் தெரிய 
வேண்டிய தேவை 
என்றும் எனக்கு
இருந்த தில்லை !
பேசா திருக்கும்
புலமையைப் பிறரும் 
மதிக்கத் தெரிந்து 
மகிழ்வார் !
      எனக்குப் பேசத் தெரியாது - என்
      ரசனையில்  குறைவே இருக்காது

அனைத்து விஷயமும் 
பற்றிய அறிவு 
ஒன்றும் எனக்குக் 
கிடையாது !
ஆனால் அவற்றின் 
ஒவ்வொரு துளியையும் 
அலசி ரசித்து 
மகிழ்வேன் - அதிலே 
உயிர்த்து வாழ்வேன் !
       எனக்குப் பேசத் தெரியாது - என்
       ரசனையில்  குறைவே இருக்காது!

மனமொரு மித்து 
இருந்து விட்டால் 
மற்றெதும் தேவை 
இருக்காது !
மனதில் காணும் 
இன்பம் அதனைச்
சொல்ல மொழியே 
கிடையாது ! 
மனமொழி மற்றும் 
உடல்மொழி யதனின்
உண்மை ஒன்றே 
போதும் !
உலகில் காணும்
கலைஞர் எவர்க்கும்
அதுவே ஊக்கம்
ஆகும்!
         எனக்குப் பேசத் தெரியாது - என்
         ரசனையில்  குறைவே இருக்காது

நம்மைச் சுற்றி 
என்றும் நிற்கும் 
நால்வகைச் சுவையின் 
சிறப்பை 
நாமும் புரிந்து 
கொண்டு ரசித்துப்
புன்னகை புரிந்தால்
போதும்!
என்றும் இளமை 
மனதில் நிற்கும்
எங்கும் மகிழ்ச்சி
பூக்கும் !
எங்கும் உவகை 
ஊற்றுப் பெருகி
உலகம் நிமிர்ந்து
நிற்கும் !
         எனக்குப் பேசத் தெரியாது - என்
         ரசனையில்  குறைவே இருக்காது !

-- கி.பாலாஜி
29.03.2020
பகல் 2.30

Monday, March 23, 2020

அமைதிப் போர்

அமைதிப் போர்

சோலைக் குயிலின் கூவல் கூட
நின்று விட்ட அமைதி !
சாலை களிலே காற்று கூடச்
சுழலா திருந்த அமைதி!

வாக னங்கள் ஒன்றும் இல்லை
வண்டிச் சத்தம் ஏதும் இல்லை
அங்கும் இங்கும் ஓடுகின்ற
சிறுவர் கூட்டம் கூட இல்லை 

பூங்காக் களிலே நடை பழகும்
மாந்தர் யாரும் கண்ணில் காணோம்
பூக்கள் கூடப் புன்னகை மறந்து 
சிந்தை குவித்து நிற்கிறதே !

பர பரப்பு என்பது எவரின் 
மனதிலும் கூட நிற்க வில்லை 
சகத்தில் எங்கும் அமைதியின் ஆட்சி 
சலனங் களுக்கோ பெருவீழ் ச்சி !

கொரோ னாவெனும் கிருமி அரக்கன்
குவ லயத்தில் ஆட்சி செய்து
கொன்று குவிக்கும் மக்கள் கூட்டம்
கணக்கில் என்றும் அடங்க வில்லை 

பேயை ஆட்சி செய்ய விட்டுப்
பிணத்தைத் தின்னும் சாத்திரமாய்
சமைந்து நாமும் நிற்க லாமோ
சமர்க்களம் புகுந்து செயல்புரி வோம்

நோயை நாமும் எதிர்த்து நிற்போம் 
நோவை மறந்து நோன்பு நோற்போம் 
இயற்கை தந்த மூலிகை யவையாம் 
இனிய வேம்பு மஞ்சள் துளசி

இஞ்சி எலுமிச் சைகளின் உதவி
தன்னைப் பெற்று எதிர்ப்புச் சக்தி
பெருக்கிக் கொண்டே போர்புரி வோம்
பேரிடர் தன்னைத் தாண்டிடு வோம்

கைகளை நன்றாய் சுத்தம் செய்து 
களத்தில் நாமும் இறங்கிடு வோம் 
ஒருவரை ஒருவர் அணைக்கா தென்றும் 
ஓரடி தள்ளியே நின்றிடு வோம்

இணைந்து நின்று செய்யும் வேள்வி 
அதனால் நன்மை பெற்றிடு வோம் 
இணைந்த கிருமிச் சங்கிலி யதனை 
இடையில் நாமும் வெட்டிடு வோம்

இருக்கும் இடத்தில் இருந்திடு வோம்
எங்கும் கூடுதல் நாம்தவிர்ப் போம்
சுத்தம் ஒன்றே சுகமாம் என்னும்
தத்துவம் தனைப்பின் பற்றிடு வோம்

பரவிய நோயை அழிப் பதற்குப்
பாடாய் படும்நம் தோழர்களைப் 
போற்றி நாமும் கர வொலியால் 
ஊக்கு வித்தே உயிர்தரு வோம்

எங்கும் அமைதி காத்திடு வோம் 
என்றும் இல்லத் திருந்திடு வோம் 
ஓய்வு என்பது பொருள் இல்லை 
ஒன்றாய் எதிர்த்தல் பொருளா கும்

அரசின் சொல்லை மதித்திடு வோம் 
அமைதி காத்து வழி நடப்போம் 
உறுதிமொழியை நாம் எடுத்த 
கணத்தில் கண்ட காட்சி யெலாம் 

மனதில் கடந்து சென்ற துவே 
மறையா தென்றும் நிலைத்த துவே 
போர்க்கா லத்தில் பெறும் துன்பம் 
தாற்கா லிகமென நம்பிடுவோம் !

--கி.பாலாஜி
22.03.2020

அணையா விளக்கு


Regret to announce about the demise of my Uncle (Father's Younger Brother) Sri K.Kalyanaraman, which happened this afternoon.

அணையா விளக்கு
--------------------------------
பழுத்த இலைகளை 
மரத்தில் பார்க்கையில் 
மனதில் நிறையும் 
மழைமேகம்!
மஞ்சள் இலைக்கு 
நடுவில் ஓடும் 
பழுப்பு நரம்புகள் 
பறைசாற்றும்
பாரில் இதுவரை 
கண்ட பலப்பல 
அனு பவங்களின் 
அழுத்தங்கள்!
ஒவ்வொரு முறையும் 
காற்றில் அசையும் 
ஒவ்வொரு  அசைவிலும்
சங்கீதம்  
தனையே கண்டு 
சிலிர்த்து நின்ற 
சீரிய அனுபவ 
சிங்காரம் !  

அனுபவத்தால் பழுத்து நீயும் 
சற்றே அசந்து வீழ்ந்தாய் !  
ஆதாரத்தில் ஆட்டம் கண்டு 
அழியாத் துயிலில் கிடந்தாய்!

வலிகளைக் கூட வரமாய் எண்ணும் 
அனுபவ ஞானம் அடைந்தாய் ! 
உதிரும் நேரம் வந்த போதும் 
உணர்வால் ஏற்கிற ஞானம்!

கதிராய் கண்முன் தெரியும் ஒளியைக் 
கண்டு மலரும் ஞானம்!
கதியாய் கமலத் திருவடி பற்றிக் 
கண்ணிமை சிரிக்கிற ஞானம்!

ஆரூர் குளமாம் கமலா லயமென
மனதில் குளிரும் ஞானம்!
ஆரூர் செல்வன் அருட்தியாகேசன்
அருளால் விளையும் ஞானம் !

நீட்டிய கைகளில் நீலோத்பலமென 
மலராய் அணையும் ஞானம்!

அழகாய் மனதில் அமைதி நிலைக்க
அன்பின் ஊற்றாய் பெருகி
உலகத் தளைகள் உன்னை விலக்க
உண்மையே வந்துனை அழைக்க,

உன்னை நீயே மறந்தாய்!
உமையவள் திருவடி நினைந்தாய்!
மாயத் தளைகள் விலகி
மனமும் உயிரும் இணைய
காலம் கடந்து 
பயணம் சென்றாய் !
கருணை ஒளியாய் 
நின்றாய் !

அன்பைப் பொழிந்து  
ஆருயிர் வளர்த்த 
அண்ணலின் இளையோய் 
வணக்கம்!
அன்றும் இன்றும் 
என்றும் எம்மில் 
உறையும் உயிரே 
வணக்கம்!
அண்ணலின் பாதச் 
சுவடைப் பற்றிய
அன்பின் உருவே 
வணக்கம்!
அறுவர் கூடப் 
பிறந்த பிறப்பே
அணையா விளக்கே 
வணக்கம்!

எங்கோ இருந்து 
எழுவராய் எம்மை 
ஆசீர்வதித்து 
அருள்வீர்!
என்றும் எம்முள் 
நிறைந்து நின்று 
நல்வழி காட்டித் 
தருவீர் !

கி.பாலாஜி
22.03.2020
மாலை 7 மணி

Tuesday, March 10, 2020

நட்பென்னும் நாணயம்

நட்பு என்பது 
நாணயம் ஒன்றின் 
இரண்டு பக்கங் கள் . 
ஒன்றில் ஓயாச் 
சிரிப்பு கேட்கும் 
உன்னத மணங்கள் 
வீசும் !
ஒன்றின் மூலையில் 
முணுமுணுப் புகளின் 
சோகக் குரலும் 
கேட்கும் !

சிரிப்பின் பக்கம் 
நட்பின் தழுவலில் 
நனையும் இதயத்தின் 
ஆசை !
இன்னொரு பக்கம் 
பிரிந்த நட்பின் 
அழியாச் சோகத்தின் 
ஓசை !

இரண்டு ஓசையும் 
ஒன்றாய் கேட்கும் 
காலங்கள் என்றும் 
குறைவே !
இரண்டும் ஒன்றாய் 
கேட்கும் காலம்,
நட்பைப் புரிந்த 
உணர்வே !

உறவு என்பதின் 
தொடக்கத்தில் பிரிவின் 
இழையும்இணைந்தே
இருக்கும்!
பிரிவின் காலம் 
அணையும் போது 
உறவின் தாக்கம் 
பேசும் !

வாழ்வுக் கென்றும் 
இரண்டு பக்கம் 
உள்ளதை உணருக
மனமே !
உணர்ந்தே அறிவின் 
ஒளியைத் தூண்டி 
உண்மையை அறியுக 
மனமே !

கி.பாலாஜி
06.03.2020
காலை 9.30

இதய தாகம்

இதய தாகம்
ராகம்: சிவரஞ்சனி

இதயம் முழுதும் வசந்த மழையில் 
நனைந்த பின்னாலும் தாகம்...
நனைந்த பின்னாலும் தாகம்...    (இதயம்)

அன்பின் வெள்ளம்  
உருண்டு புரண்டென் 
உள்ளில் பொழிந்து வழிந்தே..
சென்ற பின் னாலும்  ஏக்கம்...
சென்ற பின்னாலும் ஏக்கம்..         (இதயம்)

ஒன்றுமில்லாமல் வரண்டதோர் காலம் இருந்ததை நீ யறி வாயோ இதயம் 
வெந்ததை நீ யறிவாயோ ...
திடுமெனத் தோன்றி 
அளவின்றிப் பொழிந்தால் 
போதுமென்றோ  சொல்லத் தோன்றும் - இது போதும் என்றோ சொல்லத் தோன்றும் 
(இதயம்)

பொழிகின்ற வரையில் 
பொழிந்தே தீர்த்திடென்  
மோகங்கள் மாய்ந்தே போகும் அதன் வேகங்கள் அழிந்தே போகும்

வடிகின்ற வெள்ளம் வடிந்தே போகும் 
மீண்டும் வேனல் காலம் !
சக்கரம் என்பது சுழன்றே தீரும் 
முடிவே தொடக்கம் ஆகும் - அது
மறுபடி முடிவினில் தொடங்கும்     (இதயம்)

கி.பாலாஜி
11.11.2019
இரவு 11.30

Monday, February 17, 2020

குணமே உருவாய்......

குணமே உருவாய்....

அருகம்புல்லின் வன்மையும் 
அடுக்குப் புல்லின் பசுமையும் 
அழகு மலரின் மென்மையும் 
அடக்குவோரின் ஆண்மையும் 
அன்பைப் பரப்பும் பெண்மையும் 
அனைத்தும் கலந்த உண்மையே
என்னில் கலந்த தன்மையே
ஒன்றாய் நிறைந்த துண்மையே !

அனைத்தும் நிறைந்த நான் என்பது 
உடலா உயிரா மனமா குணமா 
அடுத்த கணத்தில் இல்லா தாகும் 
உடலைத் தவிர்த்தல் கூடுமா 
உடல்தான் அழிந்தால் உலகம் போற்றும் 
குணங்கள் அழிதல் கூடுமா 
உடலைச் சுற்றிய பெயரைப் பற்றிய 
குணங்கள் அவற்றின் பெருமையால் 
பெயரும் உருவாய் நிலைத்து வாழும் 
பேறைப் பெறுவது திண்மையே !

கி. பாலாஜி
17.02.2020
காலை 11 மணி

Thursday, January 9, 2020

காவியம் அளந்த கண்ணன்

ராகம்: அமீர் கல்யாணி

மார்கழி முழுவதும் மலர் தூவல்
மனதை நிறைத்திடும் திருப்பாடல்
கடலைக் கடைந்திடும் அருட்தேடல்
கனவுகள் மெய்ப்படும் விளையாடல் !

கருணை வேண்டிக் கதவுகள் தட்டிக்
கைகளை ஏந்தி நின்றேன்
கருணாமயனும் கண்களின் அசைவால்
காவிய மளந்து தந்தான்

கானம் தோறும் கண்ணன் நினைவே
காணு மிடமெலாம் கண்ணன் உருவே
கைகளை நனைத்தால் கவளம் கண்ணன்
கண்களை அடைத்தால் கனவும் கண்ணன்

கறவை இனங்களின் கரைதலில் கண்ணன்
பறவை கணங்களின் இரைச்சல் கண்ணன்
பச்சிள மதலை மொழிகளில் கண்ணன்
பாவையர் பாடும் பாடலில் கண்ணன்

கண்ணன் அன்றிக் கனவுகள் உண்டோ
கதைகள் பகரும் காட்சிகள் உண்டோ
கண்ணன் நினைவுகள் ஒன்றே போதும்
கவலைக ளெல்லாம் மறந்தே போகும் !

கி.பாலாஜி
08.01.2020
பகல் 12

Sunday, January 5, 2020

ரத்ன சபாபதி




ரத்னசபாபதி  ராகம் : ஹிந்தோளம்

ரத்னசபா பதியின்
ரகசியம் அறிவாயோ - மனமே.           (ரத்ன)

ஐம்பெரும் பூதத்தில் ஒன்றென வாகும் ஆகாயத்தில் அருள்வெளி அவனே
ஆகாயம் போல் திறந்த வெளியாம்
அவனும் என்பதே ரகசிய மாகும்        (ரத்ன)

சிதம்பர ரகசியம் வேறொன்றில்லை
சிவனை நினைத்தால் நமபய மில்லை சிந்தையில் என்றும் சிவன்பெயர் நின்றால் சிற்றம் பலத்தைக் காண்பது திண்ணம்
(ரத்ன)

--கி.பாலாஜி
10.12.219
மாலை 4 மணி
திருக்கார்த்திகை தினம்