Face Book LIKE

Wednesday, April 1, 2020

புன்னகை புரிந்தால் போதும்


புன்னகை புரிந்தால் போதும்



எனக்குப் பேசத் தெரியாது - என் 
ரசனையில் குறைவே இருக்காது!

சிறுவர் குழாத்தின் 
இடையே  நானொரு 
சிறுவன் !
இளைஞர் குழுவின் 
இடையில் நான் ஒரு 
இளைஞன் !
முதியோர் கூட்டம்
தனிலே  நானொரு 
முதியோன் !
அனுபவம் ஒன்றே 
அங்கே பேசும் !
அனைத்தும் மலராய்
மணம் வீசும் !
   எனக்குப்பேசத் தெரியாது என் 
    ரசனையில் குறைவே இருக்காது

இலக்கிய வாதிகள் 
இடையில் நானொரு 
இலக்கிய ரசனை 
மிக்கதோர் பிறவி !
இசைக் கலைஞர் 
மத்தியில் நானொரு 
இசையை ரசிக்கும் 
இசைஞன் !
பேசத் தெரிய 
வேண்டிய தேவை 
என்றும் எனக்கு
இருந்த தில்லை !
பேசா திருக்கும்
புலமையைப் பிறரும் 
மதிக்கத் தெரிந்து 
மகிழ்வார் !
      எனக்குப் பேசத் தெரியாது - என்
      ரசனையில்  குறைவே இருக்காது

அனைத்து விஷயமும் 
பற்றிய அறிவு 
ஒன்றும் எனக்குக் 
கிடையாது !
ஆனால் அவற்றின் 
ஒவ்வொரு துளியையும் 
அலசி ரசித்து 
மகிழ்வேன் - அதிலே 
உயிர்த்து வாழ்வேன் !
       எனக்குப் பேசத் தெரியாது - என்
       ரசனையில்  குறைவே இருக்காது!

மனமொரு மித்து 
இருந்து விட்டால் 
மற்றெதும் தேவை 
இருக்காது !
மனதில் காணும் 
இன்பம் அதனைச்
சொல்ல மொழியே 
கிடையாது ! 
மனமொழி மற்றும் 
உடல்மொழி யதனின்
உண்மை ஒன்றே 
போதும் !
உலகில் காணும்
கலைஞர் எவர்க்கும்
அதுவே ஊக்கம்
ஆகும்!
         எனக்குப் பேசத் தெரியாது - என்
         ரசனையில்  குறைவே இருக்காது

நம்மைச் சுற்றி 
என்றும் நிற்கும் 
நால்வகைச் சுவையின் 
சிறப்பை 
நாமும் புரிந்து 
கொண்டு ரசித்துப்
புன்னகை புரிந்தால்
போதும்!
என்றும் இளமை 
மனதில் நிற்கும்
எங்கும் மகிழ்ச்சி
பூக்கும் !
எங்கும் உவகை 
ஊற்றுப் பெருகி
உலகம் நிமிர்ந்து
நிற்கும் !
         எனக்குப் பேசத் தெரியாது - என்
         ரசனையில்  குறைவே இருக்காது !

-- கி.பாலாஜி
29.03.2020
பகல் 2.30

No comments: