இரு கை ஓசை கேட்கிறதே !
இதயத்தின் பாடல் இனிக்கிறதே!
சிந்தனைப் பறவை எழுந்து நின்றே
சிறகுக ளடித்துப் பறக்கிறதே ! (இரு கை)
விரிகின்ற வானம் தூரமில்லை
விடியல் மனம் விட் டகல்வதில்லை
அடிக்கின்ற அலைகள் ஓய்வதில்லை
ஓய்ந்திட நின்றால் ஏது எல்லை ! (இரு கை)
அன்பெனும் அட்சய பாத்திரத்தில்
அளைந்திடக் கைகள் துணையுண்டு
அள்ளி வழங்கிட மனம் உண்டு
ஆனந்தம் பகிர்ந்திட இடமுண்டு (இரு கை)
இதயத்தை அள்ளி இறைத்திடு வா
இறைவன் அளித்த வரம் இது வே
இன்பத்தை எங்கும் கண்டிடலாம்
இருப்பதைக் கொடுத்து வென்றிடலாம் (இரு கை)
--கி. பாலாஜி
03.12.2018

No comments:
Post a Comment