Face Book LIKE

Friday, September 27, 2019

தோடகாஷ்டகம்

தோடகாஷ்டகம்


அறிவுக்கடலே! அருள்நிதியே!
அத் வைதமதை அருளிய மறையே !
அமைதிப் பொருளே! ஆதரவே!
அருள் சங்கர குருவே சரணம் சரணம்

பிறவித் துயரில் அளைந்தே களைத்தேன்
கருணைக் கடலே காத்திட வேணும்
எல்லா அறிவும் எனைச் சேர்ந்திடவே
அருள் சங்கர குருவே சரணம் சரணம்

ஆதி சங்கர ஜனனம் அதனால்
அருள்மழை யதனில் குளிர்ந்தது உலகம்
ஆத்மபோதம் அருளுக திருவே
அருள் சங்கர குருவே சரணம் சரணம்

கயிலை நாதனின் உருவே தாங்கள்
கண்டேன் அறிந்தேன் மனமும் மகிழ்ந்தேன்
மோக விடுதலை அளித்தே காப்பீர்
அருள் சங்கர குருவே சரணம் சரணம்

புண்ணியம் செய்தோர் புகலிடம் தேடி
ஞானம் பெறவே நண்ணினர் உம்மை
அறிவொன்றும் இலாக் கடையேன் எனக்கும்
அருள் சங்கர குருவே சரணம் சரணம்

மறைவா யுலவும் மகான்க ளிடையில்
ஞானக் கதிரோன் எனவே வந்தீர்
குருவில் சிறந்த குருவும் ஆனீர்
அருள் சங்கர குருவே சரணம் சரணம்

இடபக் கொடி யுடை சிவனே யானீர்
இருளழித் திடுமோர் ஞானச்சுடரே
அடைக்கலம் திருவடி என்றோர்க் கபயம்
அருள் சங்கர குருவே சரணம் சரணம்

அறிவும் பணமும் என்னிடம் இல்லை
அனைத்துச் செல்வமும் அருள்வோய் போற்றி
ஆதரவளித்துக் காத்திட வேண்டும்
அருள் சங்கர குருவே சரணம் சரணம்

சங்கரன் அடியார் தோடகர் சாற்றிய தோத்திரம்
தன்னைப் பணிந்தே சொன்னேன் நானும் 
சொல்பிழையனைத்தும் பொறுத்திடவேண்டும்
குருவின் தாமரைத் திருவடி சரணம்

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

--கி.பாலாஜி
09.05.2019
மாலை 3.05

No comments: