Face Book LIKE

Sunday, November 24, 2019

சேவற்கொடி நாயகன்


சேவற்கொடி நாயகன்

அடியெடுத்துக் தந்திடுவாய்
அந்த மிகு செந்தமிழில்
அன்பருக்கு அருள்புரியும்
ஆறுமுக வேலவனே !

மூவாத தமிழாலே
முக்காலும் உனைப்பாட
முந்தி வந்து அருள் புரிவாய்
முத்தமிழின் பேரெழிலே !

தீந்தமிழின் சுவையதனைச்
சிந்தையதில் தெளியவைத்தாய்
சித்திரத்தைப் போல் எழுதி
சித்தமதைக் குளிர வைத்தாய்!

சொற்றொடரில் மாலை கட்டி
சோதியுனைப் பாட வைத்தாய்
சொற்களுக்குள் அடங்காத
அற்புதமே ஆறுதலே !

ஆறுபடை வீடு கொண்டாய்
சூரனுக்கும் பேறளித்தாய்
ஆலால சுந்தரனின்
சேயாக வந்தவனே !

மூலமதன் முழுப் பொருளை
ஆலமுண்ட நாயகற்கும்
கோலமுறச் சொல்லிவைத்தாய்
சேவற்கொடி நாயகனே!


கி.பாலாஜி
31.10.2019
பகல் 2.30

No comments: