Face Book LIKE

Showing posts with label Fall of Ganges. Show all posts
Showing posts with label Fall of Ganges. Show all posts

Wednesday, October 28, 2009

கங்கா ப்ரவாஹம்

பூமியிலே புரண்டு வருகிற புண்ணிய நதியாம் கங்கையைப்பற்றி நான்கு வரிகள் எழுத நேர்ந்தது ஒரு பாக்கியம் என்று கருதுகிறேன் ! கங்கா ப்ரவாஹத்தைப்பற்றிய ஒரு வீடியோவையும் கீழே காணலாம்:

கங்கா ப்ரவாஹம்
மாதொரு பாகன் மன்னிய சிவனார்
விரிசடை மீதிருந்தே
மாது கங்கை மாறா ஒளியுடன்
மண்ணதி லேவீழ்ந்தாள் !

வீழ்ந்திடு கங்கைதன் வெள்ள மதிலே
மூழ்கிடு மானுட ரின்
வினைகள் தீர்க்கும் விளையாட் டதனை
வீறுடன் தொடங்கிட்டாள்!

ஓவென் றிரைச்சலாம் ஓங்காரத்துடன்
ஓயாப் பணி புரிந்தே
உலகம் புரந்திட உமையவள் நாதன்
உயிரா யனுப்பிவைத் தான் !

அன்பே உருவாம் அரும்பழ மென்னும்
அண்ண லிடமிரு ந்தே
புறப்படு கங்கை புண்ணிய நதியெனும்
புகழுட லெடுத் தாளே !

போகும் வழியில் புண்ணிய கங்கை
புகலிடம் தேடி வந்த
புல்லையும் கல்லையும் கூடத் தனது
புணர்ச்சியில் விளக்கிட்டாள் !

பருவம் என்னும் போராட் டத்தால்
பகலவன் காய்ந்தா லும்
உருவம் மாறா துயிர்களைக் காக்க
ஊற்றாய் பெருகிட்டாள்!


உயிர் பிரிந்தேக உடல் மண் ணாக
உலகினர் விடைகூ றிக்
காசியெனும் வழிச் செல்லும் கங்கையில்
கரைத்தே கடன் தீர்ப் பார் !

அசுத்தம் என்றே அனைவரும் கருதும்
அச்சுமை தானேற் கும்
பொறுமை மிகுந்த புண்ணிய மாது
புவியென வாழிய வே !

வற்றா நதியாய் வாழும் நதியாய்
வந்தே உயிர்காக் கும்
பெற்றா யெனவே பேணியே நாமும்
போற்றித் துதிப்போமே !

காளியன்னை தான் தன் கருணையை
கங்கை வெள்ள மதில்
கலந்திடச் செய்தே கலிதீர்த்தா ளென
வணங்கிப் போற்று துமே !

--பாலாஜி--