Face Book LIKE

Monday, April 22, 2019

இறைவா உனக்கு நன்றி !

இந்தக் கணத்தை எனக்கு அளித்த
இறைவா உனக்கு நன்றி!
இன்று புதிதாய் பிறந்த உணர்வை
ஈந்த உனக்கு நன்றி!

இதுவரை மலர்ந்த மலர்கள் பரப்பிய
மணத்தில் மனமும் குளிர்ந்தேன்!
இதோ விரிந்த காலைக் கதிரின்
இளகிய சூட்டில் மகிழ்ந்தேன்!

இனிய மதலைச் சிரிப்பின் முன்னே
இதயம் கொட்டிக் கவிழ்த்தேன்!
கரையும் காகம் குயிலின் குரலில்
உலகை நானும் மறந்தேன் !

ஒலியின் ஒவ்வோ ரலையிலும் இசையின்
அதிர்வைக் கேட்டு ரசித்தேன்!
மலரின் சிரிப்பில் மதலையின் மொழியில்
மயங்கும் மனமிது சுகமே!

இனியெவர் பொருட்டும் இதயம் ஏங்கும்
கணங்கள் எனக்கு இல்லை!
இருக்கும் வரையில்  அன்பை மட்டும்
ஈந்து வந்தால் போதும் !

இதயம் கனிந்து எதிலும் கலந்து
கரைந்து நின்றால் போதும்!
இதுவரை நடந்த செயல்க ளெல்லாம்
உனதென் றுணர்ந்தால் போதும்!

பலனும் வேண்டாம் பரிசும் வேண்டாம்
பாசம் ஒன்றே போதும்!
அதுவும் உன்மேல் வைத்துப் பிறப்பின்
உண்மை உணர்ந்தால் போதும்!

-- கி.பாலாஜி
01.01.2019
இரவு 9.10

No comments: