Face Book LIKE

Monday, April 22, 2019

கலையாத சித்திரம்

கலையாத சித்திரம்

நெஞ்சத்தை தூசு தட்டி
நிறுத்தி எழுப்பி வைத்தால்
என்றைக்கும் கலையாமல்
சிரித்திருக்கும் சித்திரம் !
தந்தைக்கு இளையவராம்
தனயனாய் தன் மகவாய்
என்னை வளர்த்திட்ட
ஏற்றமிகு சித்தப்பா !
ஆண்டொன்று இருக்கையிலே
அவர் காட்டிய அன்பால் என்
பிறந்தநாள் கொண்டாட்டம்
சிறந்ததென நான் அறிந்தேன்
வீட்டிற்கொரு பிள்ளையெனப்
பேணி வளர்த்த விதம்
பலவாறும் பலர்புகலக் 
கேட்டு  மகிழ்ந்திருந்தேன்
சற்றே வளர்ந்தவோர்
பாலகனாய் நான் இருக்க என்
நடத்தை களையெல்லாம்
சிறக்கச் செய்திடுவார்
பன்னிரண்டாம் பிராயத்தில்
பால் குடிக்கும் குழந்தை
நீயல்ல வெனச்சொல்லிப்
பலரோடும் பழகி வரப்
புறத்தே யனுப்பிடுவார் !
திரைப்படம் காண்பதற்குக்
கூட்டிச் செல்கையிலே
நெற்றியில் திருநீற்றுக்
கீற்றிட்டுத் தாமதித்தேன்!
எந்தெந்த நேரத்தில்
எது செய்ய வேண்டுமெனச்
சொல்லியொரு பாடம்
புகட்ட வொரு வார்த்தை மழை!
உள்ளத்தில் அன்பு
ஊற்றெனவே நிறைந்திருக்கும்
வெளியே பார்ப்பதற்கு
வேறொன்றும் தெரியாது!
பதினாறாம் பிராயத்தில்
பாலகன் நீயல்ல வெனச்
சொல்லிப் புறந்தள்ளிப்
பணிகளை ஏற்பிப்பார் !
அரசுப் பணி நிமித்தம்
அவர் ஏற்ற காரியமும்
என் கையில்தான் தந்து
என்னைமெரு கேற்றிடுவார் !
மனிதரோடு மனிதனாகப்
பழகவெனைப் பழக்குவித்த
பண்புதனை இன்றளவும்
நினைக்கின்றேன் உள்ளில் நான்!
அரைகுறையாய் எனக்கிருந்த
சங்கீத ஞானத்தை
அழகாய் மெருகூட்டித்
தந்தென்னை உய்வித்தார்
கலைகளிலே அவர் தமக்
கிருந்தவோர் நாட்டமெல்லாம்
கணக்கில் அடங்காது
கணக்கெடுக்க வியலாது
பள்ளிப்படிப் பேதோ
குறைவா யிருந்தாலும்
இத்தனை அறிவேது
இவருக்கென வியப்பேன்!
வரைகலையும் விஞ்ஞானம்
ஆங்கிலத்தில் இலக்கியம்
பொருளாதாரத் திலுமென்ன
புலமையென நான் வியப்பேன் !
கல்லூரி நாட்களிலே
எனக்கிருந்த ஐயமெல்லாம்
கணத்தில் தீர்த்து வைப்பார்
கண்டிப்பு நிறை ஆசான் !
எத்தனை திறமைகள்
எத்தனை புலமைகள்
அத்தனையும் ஓர் நாளில்
ஆவியாய் போனதென்ன?
அன்பை மாத்திரமே
எங்கும் நிறைத்து விட்டு
அனைவரிலும் வெறுமையதை
விதைத்து விட்டு விடை பெற்றார்
நாற்பத்து மூன்றாண்டுக்
காலம் நகர்ந்தாலும்
நல்லதொரு நினைவுகள்
மாத்திரம் அகல்வதில்லை !
நன்மைகள் புரிந்தின்றும்
எம்மைக் காக்கின்றார்
நலமே  சூழ்கென்று
வாழ்த்தி யருள்கின்றார் !
--கி.பாலாஜி
13.04.2019
நடராஜன் சித்தப்பாவின் நினைவுநாள்!
அன்னாரின் நினைவுக்காக !

No comments: