Face Book LIKE

Monday, April 22, 2019

மனமெனுமோர் மயனின் மாளிகை

மனம் எனும் ஓர் மயனின் மாளிகை அதில்
தினமு லாவும் தீயோர்
இன்பத் தாரகை
கணங்கள் தோறும் பிறக்கும்
தேவகானங்கள்
கனலும் நெஞ்சைக் குளிர வைக்கும்
கருணைப் பார்வை ரேகைகள்

காதல் என்னும் ராகம் தேடிக்
கழித்து வந்தேன் யுகங்கள் கோடி
கணத்தில் நெஞ்சில் புகுந்து கொண்டாய்
கழிந்த கணத்தை மீட்டுத் தந்தாய்
கலைந்த மேகம் கனவு எல்லாம்
களிப்பில் ஒன்றுகூடக் கண்டேன்
காலைப் பனியின் கதிரில் எந்தன்
கலிகள் ஓடி ஒளியக் கண்டேன்

வாடும் மனதை வாழவைக்கத்
தேடி வந்த தேவமலரே
சென்ற உயிரின் நின்ற துடிப்பை
மீட்டுத் தந்த மகர யாழே
பாட்டில் உன்னைப் பரவி வாழ்த்தப்
பதங்கள் தேடினேன்
பதங்கள் யாவும் போதவில்லை
பாதம் நாடினேன்

கி.பாலாஜி
05.06.1985
காலை 5 மணி

No comments: