Face Book LIKE

Monday, April 22, 2019

நினைவு மலர்கள்

நினைவு மலர்கள்

அன்றைய நினைவுகள்
அனைத்துமே மனதினில்
அழுத்தமாகவே
அமர்ந்து விட்டன !
ஆலாபனங்களைத்
தொடங்கி விட்டன !
நினைவுகளுக்கு
குணமும் உண்டு,
மனதை மலர்த்தும்
மணமும் உண்டு !

சென்றதை எல்லாம்
சேர்த்து வைத்து,
'நடந்தவை எல்லாம்
நன்மை' என்னும்
போர்வையதனைப்
போர்த்தி எடுத்து,
புன்னகையுடனே
நமக்கு அளிக்கும்
அனுபவ ஞானம்
அதற்கு உண்டு !
கண்ணுக்கெட்டிய
தூரம் வரையில்
விரிந்து கிடக்கும்
பசுமை வெளியும்,
பூமியின் முகத்தில்
புன்னகை நிறைக்கப்
புதுமை மஞ்சள்
பூசிய முகங்களும்,

அன்றைய மழையில்
மனதை நனைத்த
மல்லிகை மணமும்
மாவின் பூக்களும்,
துவண்டு வீழும்
கணங்களில் எல்லாம்
தோரணமாக என்
தோளில் படர்ந்த நின்
அன்புக் கரங்களும்
அற்புதச் சிரிப்பும்,
வாழ்வில், இன்னும்
வேண்டும் என்னும்
வேண்டுதல் இன்றி
வாழ்ந்த நாட்களும்,

இன்னும் என்னுள்
வந்து துளிர்க்கும்
வசந்த காலத்
துணர்வை வளர்க்கும்!

நினைவுகள் ஒன்றே
என்னுள் என்றும்
கலந்து கரையும்
இன்னிசை யுருவம்!

உணர்வில் கலந்து
உறைந்து நின்று
உயிரை வளர்க்கும்
சங்கீதம் !

--கி.பாலாஜி
07.04.2019

No comments: