Face Book LIKE

Monday, April 22, 2019

இன்னிசையின் அதிர்வலைகள்

சங்கீத அதிர்வலைகள்

நினைவுகளைத் தொலைத்துவிட்டு
நிற்கிறேன் நான் இன்று
ஏதோவோர் இழை மட்டும்
இன்னும் தெரிகிறது !

அறுந்ததோர் பட்டம் போலே
அலைந்தே திரிகின்றேன்
நுனியைப் பிடித்தவாறே
நூலிழையாய் நகர்கின்றேன்

ஒளிவீசும் கதிர்களிலே
ஒரு கதிர் மாத்திரம் என்
கண்முன்னே வாராதோ
கவலைகள் தீராதோ

காற்றின் திசை போன
போக்கில் நான் பயணிக்க
கணநேர மின்னலென
கதிர்வீச்சின் வெள்ளமென

புன்னகைப் பூ பூக்கிறது
புவியே மலர்கிறது
பூந்தோட்டம் சிரிக்கிறது
புதுமழலை பிறக்கிறது

பொன்னாரம் ஒன்றெந்தன்
நெஞ்சார நிலைக்கிறது
போற்றிப் பரவசத்தில்
மகிழ்ந்து மனம் லயிக்கிறது

கண்ணார நான் காணும்
காட்சிகளில் ஒளிவட்டம்
மனதார நான் எழுதும்
வரிகளிலே மணிநாதம்

சலனமற்ற தடாகத்தில்
சலசலப்பின் மகிழ்வலைகள்
சந்நிதியின் திரைவிலக
சங்கீத அதிர்வலைகள் !

--கி. பாலாஜி
07.04.2019

No comments: